Thursday 26 May 2016

கவலையில்லாத கால்நடை வளர்ப்பு!

செலவில்லாத தீவன சாகுபடி... ஆரோக்கியத்தோடு அதிக பால்...
பருவ நிலை மாறுதல்களால் விவசாயம் பொய்த்துப் போனாலும், தவறாமல் வருமானத்தைக் கொடுப்பது கால்நடை வளர்ப்புதான் என்றாலும் திட்டமிட்ட தீவன மேலாண்மையும், நோய் மேலாண்மையும் இருந்தால் தான் கால்நடை வளர்ப்பில் லாபத்தை சம்பாதிக்க முடியும். இதை எல்லாம் நான் தவறாமல் பிடிப்பதால் தான் என்னுடைய ஆடு, மாடுகள் எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக திடக்காத்திரமாக இருந்து எனக்கு இலாபத்தை கொடுத்துக் கொண்டிருக்கு என்று தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஆதிநாராயணன், பசுந்தீவனத்திற்காக தனித்தோட்டத்தையே பராமரித்துக் கொண்டிருக்கிறார்.
பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள பாப்பா நாடு அருகிலுள்ள ஆலத்தன்குடிகாடு கிராமத்தில் தான் இருக்கிறது. அந்த தீவனத் தோட்டம். மல்பெரி, வேலிமசால், சவுண்டல் (சுபாபுல்) என ஏகப்பட்ட தீவனப்பயிர்கள் தளதளவென நின்று கொண்டிருக்கின்றன இரண்டரை ஏக்கர் தோட்டத்தில்.
பத்து ஆண்டுகளுக்கு முன் நூறு ஆடுகளை வைத்திருந்தேன். அதற்காக உருவாக்குனது தான் இந்தத் தீவனத் தோட்டம். 20 சென்ட் நிலத்தில் தண்ணீர்ப்புல் (எருமைப்புல்) 230 சென்டில் மல்பெரி, அதற்கிடையில் ஊடுபயிராக முயல்மசால், வேலிமசால், கலப்பைக் கோணியம், சங்குப்புஷ்பம் எல்லாம் இருக்கிறது. வேலி ஓரத்தில் 500 சவுண்டல் மரம் இருக்கு. இந்தத் தோட்டத்தை வைத்து பத்து பதிணைந்து மாடுகள், கொஞ்சம் ஆடுகள் வளர்க்க முடியும்.
ஆறு வருடத்திற்கு முன்பு வேலையாட்கள் பிரச்சனை வந்ததால், ஐந்தாறு ஆட்டை மட்டும் வைத்துக் கொண்டு மீதத்தை விற்றுவிட்டேன். இப்பொழுது என்னிடம் இரண்டு கறவை மாடுகளும் ஐந்து ஆடுகளும் தான் இருக்கிறது. என் ஆடு, மாடுகளுக்குப் போக மீதமுள்ள தீவனத்தை பக்கத்து விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்கேன். கொஞ்சத்தை அப்படியே வெட்டி, தோட்டத்தில் மூடாக்காக போட்டு இருக்கேன். அப்படியிருந்தும் மல்பெரி நிறைய இருப்பதால் பட்டுப்புழுவையும் வளர்த்துக் கொண்டிருக்கேன்.
குறைவான செலவு அதிக ஆரோக்கியம்!
கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தை அதிகமாக பயன்படுத்த சொல்கிறார்கள் கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள். அதேபோல் நம் அரசு கால்நடைப் பண்ணைகளையும் பசுந்தீவனத்தைதான் நிறையப் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் தீவனச் செலவு குறைவது மட்டுமல்லாமல் ஆடு, மாடுகள் ஆரோக்கியமாக வளர்கிறது. அதனால்தான் நான் தீவனங்களை உருவாக்கிவிட்டு பண்ணைத் தொழிலில் இறங்கினேன். ஆனால் பல இடங்களில் புதிதாக பண்ணை வைக்கிறார்கள். தீவனத்தைப் பயிர் செய்யாமல் பண்ணையை ஆரம்பித்து கடைசியில் தீவனத்திற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அதிக விலை கொடுத்து புல்லையும், அடர்தீவனத்தையும் வாங்கிப் போட்டு நட்டமாகிவிட்டது. ஆடு, மாடு வளர்த்தாலே நட்டம் என்று தான் சொல்வார்கள்.
ஒரு தடவை நட்டா வருடக்கணக்கில் பலன்!
மிகக் குறைவான செலவில் அதிகமான சத்து கிடைக்கிற பசுந்தீவனங்களை விவசயிகளே உற்பத்தி செய்து லாபம் சம்பாதிக்க முடியும். கொஞ்சமாக நிலம் இருந்தால் கூட போதும். ஒரு தடவை விதைத்துவிட்டாலே நிறைய வருடங்களுக்கு விளைச்சல் இருக்கிற தீவனப் பயிர்களும் கூட இருக்கிறது.
இந்த தண்ணீர்புல், முயல்மசால், வேலிமசால், கலப்பை கோணியம், சங்குப்புஷ்பம், மல்பெரி, சூபாபுல், எல்லாமே போட்டு பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. எந்தப் பராமரிப்பும் கிடையாது. அறுப்பது மட்டும்தான் வேலை. முழுக்க இயற்கை விவசாயம் தான். ரசாயன உரத்தையோ, பூச்சிக்கொல்லியையே தொடுவதே கிடையாது. என்னுடைய இரண்டு மாடு, ஐந்து ஆடுகளுடைய கழிவுகள்தான் இதுக்கு உரம். இவைகளைச் சாப்பிட்டுத்தான் என்னுடைய ஆடு, மாடுகள் திடகாத்திராக இருக்கிறது.
பசுந்தீவனத்தால் கெட்டியான பால்!
ஒரு கறவை மாட்டிற்கு தினம் பசுந்தீவனம் - 20 கிலோ, வைக்கோல் – 10 கிலோ, அசோலா – 5 கிலோ, தவிடு – 3 கிலோ, கடலைப்பிண்ணாக்கு – அரை கிலோ கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு மாடு ஒரு நாளைக்கு 10 லிட்டர் பால் கொடுக்குது. நல்லா கொழகொழ என்று தரமாக பால் இருக்கிறது. பசுந்தீவனம் நிறைய சாப்பிடுவதால் உரிய காலத்தில் சினை பிடித்துவிடுகிறது.
தினமும் ஒரு ஆட்டிற்கு 5 கிலோ பசுந்தீவனம் கொடுக்கிறேன். பசுந்தீவனத்திற்கு ஆரம்பக் கட்ட செலவு மட்டும்தான். வேறு செலவே இல்லை. ஆனால் கடைகளில் வெ்வளவு வாங்கிப் போட்டாலும், செலவுதான் அதிகம், பால் அளவு கூடாது.
20 சென்டில் எருமைப்புல்:
பொதுவாக அனைத்து வகையான மண்ணிலும் தீவனப் பயிர்கள் நன்கு வளரும். அதனால் மண்ணைப் பற்றிய கவலையில்லை. நிலம் முழுவதும் இரண்டு சால் உழவு ஒட்டி மண்ணை நன்கு பொல பொலப்பாக வேண்டும். பின் பத்து டன் தொழுவுரம் போட்டு, மறுபடியும் ஒரு சால் உழவு ஒட்ட வேண்டும். 20 சென்டில் ஆயிரம் தண்ணீர்ப்புல் விதைக்கரணைகளை ஊன்ற வேண்டும். இது வேகமாக மண்டும் என்பதால் குறைந்த அளவு நிலத்தில் விதைத்தாலே போதுமானது. மண்ணை நன்றாக சேறாக்கி இரண்டடி இடைவெளி விட்டு, கரணையின் கணு மண்ணில் புதையுமாறு நடவு செய்ய வேண்டும். மூன்றாவது நாளில் தண்ணீர் பாய்ச்சி அதிலிருந்து வாரம் ஒரு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
20ம் நாளில் களையெடுத்து 200 லிட்டர் நீரில் 10 கிலோ சாணம், 10 லிட்டர் மாட்டுச்சிறுநீர், அரை கிலோ மாட்டுக் கொட்டகை சகதி (சிறுநீர், சாணம் கலந்த மண்) ஆகியவற்றைக் கலந்து ஒரு நாள் முழுக்க வைத்திருந்து, பாசன நீரில் கலந்து விட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதைத் தொடர்ந்து செய்யலாம்.
90 – ம் நாளிலிருந்து இந்தப் புல்லை அறுவடை செய்யலாம். தரையிலிருந்து நான்கு அடி உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து 35 நாட்கள் இந்தப் புல் வளர்ந்தால் தான் முற்றி, அதிக சத்துக்கள் கிடைக்கும். ஆகவே, 35 நாட்களுக்கு ஒரு முறைதான் அறுவடை செய்ய வேண்டும். ஒரு அறுவடைக்கு 1,000 கிலோ புல் கிடைக்கும். தேவையைப் பொறுத்து பகுதி பகுதியாகக் கூட அறுவடை செய்யலாம். ஒரு வருடம் கழித்து பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இடை உழவு செய்தால் புது வேர்கள் விட்டு, அதிக மகசூல் கிடைக்கும்.
230 சசென்டில் மல்பெரி, ஊடுபயிர்களாக வேலிமசால், முயல்மசால், கலப்பைக் கோணியம்:
5 அடி இடைவெளியில், 3 அடி அகலம், அரை அடி ஆழம் கொண்ட வாய்க்கால்களை அமைக்க வேண்டும். வாய்க்கால் தோண்டும்போது கிடைக்கும் மண்ணை இரு வாய்க்கால்களுக்கு இடையில் போட்டு, மேட்டுப்பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். வாய்க்காலின் வெளிப்புற இரு ஓரங்களிலும், கரணைக்குக் கரணை மூன்றடி இடைவெளி இருக்குமாறு மல்பெரி விதைக் கரணைகளை நட வேண்டும். கரணையில் இரண்டு கணுக்கள் மண்ணுக்குள் புதையுமாறு இருக்க வேண்டியது அவசியம். 230 சென்ட் நிலத்திற்கு 13 ஆயிரம் விதைக்கரணைகள் தேவைப்படும்.
வாய்க்கால்களுக்கு இடையில் உள்ள மேட்டுப் பாத்திகளின் மையத்தில் விதைகளை விதைப்பதற்காக அரை அங்குல ஆழத்திற்கு நீளமாக கோடு இழுக்க வேண்டும். ஒரு பாத்தியில் வேலிமசால், இன்னொரு பாத்தியில் முயல்மசால், அடுத்த பாத்தியில் கலப்பைக் கோணியம் என மாற்றி மாற்றி விதைக்க வேண்டும். ஒவ்வொரு விதையும் தலா இரண்டு கிலோ தேவைப்படும். விதைப்பதற்கு முன் ஒவ்வொரு வகை விதைகளுடனும் ஆறு கிலோ மணலைக் கலந்து சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். அதன்பின் விதைத்து உயிர்த் தண்ணீர் விட வேண்டும். மூன்று நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின் நிலத்தின் ஈரத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போது 200 லிட்டர் நீரில், 10 கிலோ சாணம், 10 லிட்டர் மாட்டுநீர், அரை கிலோ மாட்டுக் கொட்டகை கோமிய சகதி (சிறுநீர், சாணம் கலந்த மண்) ஆகியவற்றைக் கலந்து ஒரு நாள் வைத்திருந்து, பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதைச் செய்யலாம்.
90 நாட்களில் அனைத்துமே அறுவடைக்கு தயாராகிவிடும். மல்பெரி, முயல்மசால், வேலிமசால், ஆகியவற்றை அறுவடை செய்யும் போது, தரையில் இருந்து ஒரு அடி உயரம் விட்டு அறுக்க வேண்டும். இவற்றை 40 நாள் இடைவெளி விட்டு மீண்டும் அறுக்கலாம். மல்பெரி மூலம் ஒரு ஏக்கரில் ஒரு ஆண்டில் தோராயமாக 30 முதல் 35 டன் தீவனம் கிடைக்கும். 100 அடி நீளம் கொண்ட பாத்தியில் 1 வருடத்தில் வேலிமசால் 400 கிலோவும், முயல்மசால் 300 கிலோவும், கலப்பைக் கோணியம் 400 கிலோவும் கிடைக்கும்.
உயிர் வேலியாக சவுண்டல்:
வேலி ஓரங்களில் 5 அடி இடைவெளியில் ஒரு சவுண்டல் விதையைப் போட்டு, 3 – வது நாள் தண்ணீர் பாய்ச்சினால் போதும். அதன் பிறகு தண்ணீர், சாணம் எதுவுமே தேவையில்லை. தானாகவே வளர்ந்து விடும். மூன்று மாதத்திலிருந்து அறுவடை செய்யலாம். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 15 கிலோ தீவனம் கிடைக்கும்.
பட்டுப்புழுவுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும்!
சாகுபடி பாடத்தை முடித்து, தொடர்ந்து பேசிய ஆதிநாராயணன், பட்டுப்புழு வளர்ப்பதற்கு மட்டும் தான் மல்பெரி என்று அனைவரும் நினைக்கிறார்கள் ஆனால் அது நல்ல கால்நடைத் தீவனம் என்பது நிறைய இருக்கிறது. இது மாதிரியான பசுந்தீவனங்களை கால்நடைகள் விரும்பிச் சாப்பிடும். மாடுகளுக்கு வெறும் அடர் தீவனத்தையும், புல்லையும் மட்டுமே கொடுத்தால் கண்டிப்பாக ஆரோக்கியமாக இருக்காது. அதனால் தான் விவசாயிகள் இடம் விழிப்பு உணர்வு கொடுப்பதற்காக பசுந்தீவன விதைகளையும், விதைக்கரணைகளையும் இலவசமாக கொடுத்து, நேரடி இலவசப் பயிற்சியும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
தொடர்புக்கு:
ஆதிநாராயணன்,
ஆலத்தன்குடிகாடு கிராமம்,
பட்டுக்கோட்டை வழி,
பாப்பா நாடு அருகில்.
அலைபேசி: 98656 - 13616

No comments:

Post a Comment