Monday 25 April 2016

ஒரு ஏக்கர் பரப்பில் பந்தல் அமைத்து புடலை சாகுபடி


ஏக்கருக்கு 180 கல்தூண்கள்!
பந்தல் காய்கறிகளுக்குப் பட்டம் கிடையாது. அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். புடலை 150 நாள் பயிர். தேர்வு செய்த நிலத்தில், 15 அடி இடைவெளியில் 10 அடி உயரமுள்ள கல்தூண்களை ஓர் அடி ஆழத்துக்குக் குழிபறித்து ஊன்ற வேண்டும். ஏக்கருக்கு 180 கல்தூண்கள் தேவைப்படும். பிறகு, கம்பி கொண்டு பந்தல் அமைத்து... 4 டிராக்டர் மட்கிய குப்பையைக் கொட்டி மினி டிராக்டர் மூலம் உழவு செய்து ஒரு வாரம் காய விட வேண்டும். பிறகு, ஓர் உழவு செய்து சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, வரிசைக்கு வரிசை 15 அடி இடைவெளி விட்டு ஒவ்வொரு வரிசையிலும் 2 அடி இடைவெளியில் கையால் குழி பறிக்க வேண்டும். ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் விதைநேர்த்தி செய்த புடலை விதைகளை விதைத்து மண் கொண்டு மூடி பாசனம் செய்ய வேண்டும். ஏக்கருக்கு 300 கிராம் விதை தேவைப்படும்.
விதைத்த மறுநாள் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து பாசனம் செய்ய வேண்டும். 5ம் நாள் முதல் 10ம் நாளுக்குள் தளிர் எட்டிப் பார்க்கும். 15ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா, 20 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற கணக்கில் கலந்து தோட்டம் முழுவதும் தெளிக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை இது போல தெளிக்க வேண்டும்.
18ம் நாள் முதல் 20ம் நாளுக்குள் கொடி படரும். கொடி படர்ந்ததும், கொடிமுனையில் கயிறு கட்டி கயிற்றின் மறு முனையைப் பந்தலில் கட்ட வேண்டும். 35ம் நாளுக்குள் கொடி வளர்ந்து பந்தலை அடைந்து விடும்.
40ம் நாளுக்கு மேல் பூக்கத்தொடங்கும். 50ம் நாளுக்கு மேல் காய்கள் தென்படும். 60ம் நாளில் இருந்து காய் பறிக்கத் தொடங்கலாம். 75ம் நாளுக்கு மேல் அதிகளவில் காய்கள் காய்க்கும். 150ம் நாள் வரை காய் பறிக்கலாம்.
20, 40, 60 மற்றும் 80ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை களை எடுக்கும்போதும்... 20 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 20 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 20 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்த கலவையில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து, ஒவ்வொரு செடியின் தூரிலும் வைக்க வேண்டும்.
ஒரே சந்தையை நம்பக்கூடாது!
'ராஜபாளையம், வில்லிபுத்தூர், சிவகாசினு மூணு ஊரு சந்தைகளுக்கும் நான் காய் அனுப்புறேன். எப்பவுமே ஒரே சந்தையை மட்டும் நம்பி இருக்கக்கூடாது. ஒரே சந்தையில மொத்தக் காயையும் விற்கும்போது விலையைக் குறைச்சிடுவாங்க. 'இதுதான் விலை... இல்லை வேண்டாம்னா எடுத்துக்கிட்டுப் போங்க’னு ஈஸியா சொல்லிடுவாங்க. காய்களைப் பறிச்சு மூட்டைக் கட்டி, அவ்வளவு தூரம் கொண்டு போய் விலைக்குப் போடும்போது, வியாபாரி வேண்டாம்னு சொன்னா அவ்வளவு கஷ்டமா இருக்கும். அதனால எப்பவுமே, குறைஞ்சது இரண்டு சந்தைகளையாவது கையில வச்சிருக்கணும். அப்பத்தான் ஒரு சந்தையில விலை இல்லாட்டாலும், இன்னொரு சந்தையில விலை கிடைக்கும். விலையில ஏற்றம் இறக்கம் இருந்தாலும் நஷ்டம் வராது' என்கிறார், ராதாகிருஷ்ணன்.
முயல்கள், எலிகள் தொல்லைக்கு கூமுட்டைக் கரைசல்!
'இந்தப் பகுதிகளில் முயல் தொல்லை அதிகம். புடலை விதை ஊன்றிய அன்றே குழியைத் தோண்டி விதையை எடுத்துவிடும். தப்பிச்சு வர்ற கொடிகளை தண்டுப்பகுதியில் கடிச்சி விட்டுடும். ரெண்டு அழுகின முட்டையை (கூமுட்டை) உடைச்சு 10 லிட்டர் தண்ணீரில் கலக்கி, வாரம் ஒரு முறை கொடியைச் சுற்றி தெளிச்சு விட்டா போதும். தோட்டத்துப் பக்கம் முயல் எட்டி கூடப் பார்க்காது. எலி, பெருச்சாளி தொல்லைக்கும் இதைச் செய்யலாம்' என்கிறார், ராதாகிருஷ்ணன்.
சிவப்பு வண்டுத் தாக்குதலுக்கு இஞ்சிபூண்டுக் கரைசல்!
கொடி படர ஆரம்பித்தவுடன் சிவப்பு வண்டுகள் தாக்கலாம். இலை அல்லது தண்டுகளில் ஒரு சிவப்பு வண்டு தென்பட்டாலும், உடனே பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். 250 கிராம் இஞ்சி, 250 கிராம் பூண்டு ஆகியவற்றை அரைத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். இக்கலவையிலிருந்து 100 மில்லி எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
புடலங்காயின் பயன்கள்!
புடலங்காய் நம் உடலிலுள்ள நச்சுகளை அழித்து வெளியேற்றுகிறது. தண்ணீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதோடு, உடலிலுள்ள தேவையற்ற உப்பு நீரை, வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றி விடும் தன்மை கொண்டிருக்கிறது. புடலை இலைச்சாறுடன், கொத்தமல்லித்தழை சேர்த்து கொதிக்க வைத்த தன்ணீரை தினமும் 3 வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுக்குள் வரும். புடலங்காயில் வைட்டமின் ஏ, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் சுண்ணாம்பு ஆகிய சத்துக்கள் இருப்பதால் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உகந்தது. பிஞ்சு அல்லது நடுத்தர காயைத்தான் சாப்பிட வேண்டும்.
பூஞ்சண நோயைக் கட்டுப்படுத்தும் விதைநேர்த்தி!
100 மில்லி பஞ்சகவ்யாவை, 300 மில்லி தண்ணீரில் கலந்து, அதில் புடலை விதைகளை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் விதைகளை எடுத்து, அவற்றின் மீது, 20 கிராம் அசோஸ்பைரில்லம், 20 கிராம் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து தூவி அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். இவ்வாறு விதை நேர்த்தி செய்தால், பூஞ்சண நோய் வராது

No comments:

Post a Comment